Saturday 19 January 2013

வெள்ளை அறிக்கை

திருவாளர் அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த நாட்களில் தீவிரவாதம் பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கப் போகின்றேன் என மிரட்டினார்.
எத்துணை விரைவாக அறிக்கை சமர்ப்பிக்கப் போகின்றீர்களோ அத்துணை நன்மைகள் விளையும் என்றார்கள் முஸ்லிம்கள். ஆனால் கடைசி வரைக்கும் மிரட்டலில் காலத்தை ஓட்டிவிட்டார்.
 
இந்தியன் முஜாஹித்தீன் என்றொரு அமைப்பு இருப்பதாக செய்திகள் வந்த போது முஸ்லிம்கள் அதை மறுத்தார்கள். ஆனால் உளவுத்துறையும் காவல் துறையினரும் எடுத்ததற்கெல்லாம் இப்படி ஒரு அமைப்பையே காரணம் காட்டிக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்கள் மாநாடு போட்டு அதை எதிர்த்தார்கள்.
 
அந்த மாநாட்டில் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றினார்கள். அதில் இந்தியன் முஜாஹிதின் பற்றிய வெள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கோரினார்கள்.
பார்க்க வைகறை வெளிச்சம்
 
ஆனால் அந்த வெள்ளை அறிக்கை வெளியே வரவே இல்லை. ஆதலால் முஸ்லிம்களே ஒரு வெள்ளை அறிக்கையைத் தயார் செய்கின்றார்கள்
அது குறித்து தகவல்களை கீழே இடம் பெறச் செய்கின்றோம்.
 

வெள்ளை அறிக்கை

 

முஸ்லிம்கள பீதியால் நடுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். காரணம் இளைஞர்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் தீவிரவாதி என முத்திரைக் குத்தப்படலாம். அந்த இளைஞர்களின் வாழ்க்கையும் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கையும் ஒட்டு மொத்தமாக நசுக்கப்படலாம்.
 
தீவிரவாதிகள் என்று பொய் வழக்குகளில் முஸ்லிம்களைச் சிக்க வைப்பவர்கள் அரசு இயந்திரம், மத்திய உளவுத்துறை ஐபி, காவல்துறை இவற்றுள் புகுந்துள்ள காவி சிந்தனையில் ஊறியக் கறுப்பாடுகள் தாம்.
இந்தக் கொடுமையை எதிர்த்து நாம் நீண்ட நாள்களாகப் போராடி வருகின்றோம்.
 
ஆனாலும் இந்தக் கருப்பாடுகள் தங்கள் கைவரிசையைத் தினம் தினம் காட்டி வருகின்றார்கள். இதனால் All India Muslim Mushawarath அகில இந்திய முஸ்லிம் முஷாவரா என்ற அமைப்பு ஒரு வெள்ளை அறிக்கையைத் தயாரித்து வருகின்றது.
 
சுமார் 600 முதல் 700 பக்கங்கள் வரை உள்ள ஒரு பெரிய அறிக்கையாக அஃது அமையும் (இன்ஷாஅல்லாஹ்) இதில் TADA தடா சட்டம், பொடா PODA என்ற சட்ட விரோதமாக குழுமுதல் தடை சட்டம் இடம் பெறும். இவற்றில் முஸ்லிம்கள் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப் பட்டார்கள் என்பவையும் இடம் பெறும். அதேபோல் எதிர் தாக்குதல் (என்கவுன்டர்) என்ற பெயரில் முஸ்லிம் இளைஞர்களை கொலை செய்வது பற்றிய ஆய்வும் இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்.
 
இன்னும் ஒரு படி மேலே போய் மத்திய உளவுத்துறை, காவல்துறை, ஊடகங்களின் மாச்சர்யம், சிமி என்ற இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கம், இந்தியன் முஜாஹிதீன் என்ற காட்டுக்கதைகள் இவை பற்றிய நேர்மையான ஆய்வு ஒன்றும் இடம் பெறும் இன்ஷாஅல்லாஹ்.
 
அதேபோல் ஆஸம் கார்க் பட்கல், மாலேகான் ,டார்பங்கா போன்ற இடங்களில் முஸ்லிம்களுக்கு நடந்த கொடுமைகளும் கணக்கில் கொண்டுவரப்படும். இதனை டெல்லியிலிருந்து வெளிவரும் மில்லிகெஜட் என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் டாக்டர் ஜஃபருல் இஸ்லாம்கான் அவர்கள்தாம் செய்கின்றார்கள். டாக்டர் ஜபருல் இஸ்லாம்கான் தான் மஜ்லிசே முஷாவரத் என்ற அமைப்பின் தலைவருமாவார். இந்த அமைப்பின் சார்பில் தான் இஃது வெளியிடப்படவுள்ளது.
 
இதற்கு உதவியாக வாசகர்கள் தங்கள் கைவசமுள்ள தகவல்களை அனுப்பிக் கொடுக்கலாம். இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட ரூபாய் 25 லட்சம் ஆகும். இதற்காக நன்கொடைகள் வழங்கிட விரும்புவோர் இதர விபரங்களுக்குத் தொடர்புகொள்ள விரும்புவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
 
All India Muslim Majlis-E-Mushawarath, D.250 Abul Fazal Enclave, Part 1, Jamia Nagar, New Delhi- 110025.

No comments:

Post a Comment